திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.53 திருவதிகை வீரட்டம் - திருக்குறுந்தொகை
கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங்
காணில் அல்லதென் கண்துயில் கொள்ளுமே.
1
பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லையம ரர்தொழு மாதியைச்
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
நண்ணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
2
உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
பெற்ற மேறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங்
கற்கி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
3
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாந் திரிபுரந் தீயெழ
விற்றான் கொண்டெயி லெய்தவன் வீரட்டங்
கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
4
பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங்
கல்லே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
5
வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோ டரவமும்
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
கண்டா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
6
அரையார் கோவண ஆடைய னாறெலாந்
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற்
கரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
7
நீறு டைத்தடந் தோளுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங்
கூறி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
8
செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர்
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங்
கங்கு லாகவென் கண்துயில் கொள்ளுமே.
9
பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
காணே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
10
வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந்
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
11
உலந்தார் வெண்டலை உண்கல னாகவே
வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச்
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
12
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.53 திருவதிகை வீரட்டம் - திருக்குறுந்தொகை
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமாற்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே.
1
நீள மாநினைந் தெண்மலர் இட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே.
2
கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண்
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.
3
பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.
4
தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே.
5
ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.
6
உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
7
ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
8
தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற்
பாரித் தேத்தவல் வல்லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.
9
அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com